லொட்டரி அதிபர் வீட்டில் ரகசிய அறை… தங்க குவியல்… கட்டுக்கட்டாக பணம் : அதிர்ந்த அதிகாரிகள்!!

628

அதிர்ந்த அதிகாரிகள்

கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் அதிகாரிகளையே மிரள வைக்கும் அளவிற்கு கட்டுக்கட்டாக பணக்குவியல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வடமாநிலங்களில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அங்கு விற்பனை செய்து வரும் கோவை லொட்டரி அதிபர் மார்ட்டின், பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடந்த 30ம் திகதியன்று கொல்கத்தா விமான நிலையத்தில் மார்டினை பிடித்த அதிகாரிகள், அவருக்கு சொந்தமான 70 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள் என 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சோதனையின் போது மார்ட்டின் வீட்டில் இருந்த ரகசிய அறையில் பணக்கட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அங்கு, கணக்கில் வராத 595 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், 619 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டவைக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. இதேபோல, கணக்கில் வராத 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 24 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.