ஆத்தூர்….

ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர். இப்குதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரின் மகள் புணர்விகா(வயது3). பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார் வேணுகோபால் . தற்போது இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதியை சந்தித்து தொழில் வளம் பெற என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மந்திரவாதி, உன் 3 வயது மகளை நரபலி கொடுத்தால் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார் . அதைக் கேட்ட தந்தையும் தாயும் பெற்ற மகளை நரபலி கொடுக்க துணிந்திருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். இரவு 11 மணிக்கு 3 வயது சிறுமிக்கு மஞ்சள் தண்ணீரை ஊற்றி இருக்கிறார்கள். அதன் பின்னர் வாயில் குங்குமத்தை வைத்து திணித்திருக்கிறார்கள். பின்னர் பூஜை அறைக்கு தூக்கி சென்று இருக்கிறார்கள். அங்கே சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்று இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்து அலறியிருக்கிறார் . சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அங்கு நடப்பதை புரிந்து கொண்ட அவர்கள் அந்த சிறுமியை மீட்டு அவரின் தந்தை வேணுகோபாலை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு போலீசுக்கு போன் செய்து இருக்கிறார்கள்.

அத்மகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வாயில் குங்குமத்தை வைத்து திணித்ததால் மூச்சுத்திணறி இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏதோ மந்திரவாதி ஒருவன் சொன்னான் என்பதற்காக பெற்ற மகளை 3 வயது மகளை நரபலி கொடுத்து விட்டு தாய் தந்தையின் செயல் நெல்லூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.