சோகக் கதை
தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.

தங்களது 7 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் இவர்கள் நடத்திய போராட்டம் வீணாகிவிட்டது. தனது கண்ணெதிரிலேயே காதல் கணவரை பறிகொடுத்த கர்ப்பிணியான அம்ருதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

9 ஆம் வகுப்பில் ஆரம்பித்த காதல் : முதன்முதலாக அம்ருதாவை சந்தித்த போது ப்ரனாய் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் படித்த பள்ளியில் அம்ருதா ஜூனியர்.

இருவரது வீடும் இரண்டு தெருக்கள் இடைவெளியில் தான் இருந்தது. இதனால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடிந்தது.

இருவரும் மெல்ல, மெல்ல காதல் வயப்பட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்த ப்ரனாய் தொழில் நுட்ப அறிவியல் படித்துள்ளார். அம்ருதா ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் இளங்கலை படித்துள்ளார்.
பல வருடங்களாக இருந்த காதல் உறவு 2017ம் ஆண்டு அம்ருதாவின் வீட்டிற்கு தெரிந்திருக்கிறது.
வீட்டிற்கு விஷயம் தெரிந்ததும் அவரது மாமா, சித்தப்பா என அனைவரும் அம்ருதாவை கடுமையாக அடித்திருக்கிறார்கள். 6 மாதத்திற்கு மேலாக வீட்டுச் சிறையிலே வைத்திருந்திருக்கிறார்கள்.
இறுதியில், வீட்டை விட்டு வெளியேறி அம்ருதா, ப்ரனாய்யை சந்தித்து தனது நிலையை எடுத்து கூறியிருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜியத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் ஆன கையோடு வெளிநாடு சென்று அங்கேயே செட்டில் ஆக இருவரும் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், அம்ருதா கர்ப்பமானதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள்.
கர்ப்பம் தரித்த பிறகு நலகொண்டாவில் உள்ள மருத்துவமனையில்தான் பரிசோதனைக்காக வந்து சென்றிருக்கிறார்கள். அப்படியொரு நாள் பரிசோதனைக்காக வந்த போதுதான் இந்தக் கொடூர கொலை நடந்திருக்கிறது.
ப்ரனாய்யை தனது தந்தைதான் கொலை செய்திருப்பார் என்று அம்ருதா கூறுகிறார். என்னுடைய சொல்படி கேட்கவில்லை என்றால் ப்ரனாய்யை கொன்றுவிடுவேன் என்று எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார் என அம்ருதா கூறியுள்ளார்.