வெள்ளத்தின் நடுவே சடலம் .. போராடும் உறவுகள் : நெஞ்சைப் உருக்கும் காட்சி!!

829

தமிழகத்தின் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம், பதைபதைக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் என்பவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் இருந்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு இருந்தது.

இதனால் ஆம்புலன்ஸ் கரையிலேயே நிறுத்தப்பட்டது. மாயாற்றை கடந்து தான் கல்லாம்பாளையம் கிராமத்துக்கு செல்ல முடியும் என்ற நிலையில்,

நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். வேறு வழியில்லாததால், நீலியம்மாளின் உடலை மரக்கட்டையில் கட்டிய அவர்கள், தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் மாயாற்றை கடந்து சென்றனர்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சி, காண்பவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. மாயாற்றின் மேல் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும்,

அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.