
வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளான தனது 10 வயது மகனை, கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரை சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மகன் வலிப்பு நோயால் துடிப்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது, எனவே மகனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என அனுமதி கோரியுள்ளனர்.
பெற்றோர் அளித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மருத்துவ அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டனர். சென்னை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்படி இன்று மருத்துவ அறிக்கை வந்தது. மருத்துவ அறிக்கையில் சிறுவனை குணப்படுத்தமுடியாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை படித்த நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார்.
சிறுவனை பராமரித்துக் கொள்ள தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க, அச்சிறுவனின் தந்தை மறுத்து விட்டார்.
சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க முடியுமா , மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.