இரண்டாம் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை : மாமியாரை அடித்து கொன்ற மருமகன்!!

1073

மாமியாரை அடித்து கொன்ற மருமகன்

மாமியார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மருமகன் உட்பட இரண்டு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த செங்கோடகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் (56), ஆசீர்வாதம்மாள் (46) ஆகியோரின் மகள் அமலாராணி (29). இவரது கணவர் சிவகுமார். தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ல் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

இதையடுத்து ராஜேந்திரன் (35) என்பவரை அமலாராணி மறுமணம் செய்துள்ளார். இந்நிலையில் இறந்து போன சிவகுமார், நகையை அடமானம் வைத்து ஒரு சிலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

இந்த நகைகளை ஏலம் போகாமல் தடுக்க ராஜேந்திரனின் தாயார் கலாமணியிடம் இருந்து அமலாராணி ஒரு லட்சம் பெற்றுள்ளார். பின்னர் கொடுத்த பணத்தை ராஜேந்திரன், மாமியார் கலாமணி ஆகியோர் திருப்பிக் கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அமலாராணியின் பெற்றோர் மரியதாஸ், ஆசீர்வாதம்மாள் ஆகியோர் மருமகன் ராஜேந்திரன் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுள்ளனர். அப்போது, கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த ராஜேந்திரன் ஆசீர்வாதம்மாளின் தலையில் கல்லால் அடித்து கொன்றார். இதோடு மரியதாசையும், ராஜேந்திரன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மரியதாஸின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஆசீர்வாதம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ராஜேந்திரன் மற்றும் கலாமணியை கைது செய்துள்ளனர்.