காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு நச்சரித்து வந்த பெண்ணை காதலன் குக்கரால் தலையில் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் எரிந்திருந்ததால் பெண்ணை அடையாளம் காண்பதில் பொலிசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷமேரி என்பவர் மாயமாகியிருப்பது தெரியவந்தது. 26ம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற பொக்கிஷ்மேரி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
பொக்கிஷமேரியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அவர் கோயம்பேடு சென்று அங்கிருந்து சென்னை என்.ஜி.ஆர் நகர் சென்றிருப்பது தெரியவந்தது. இறுதியாக செல்போன் சிக்னல் காண்பித்த வீட்டில் உள்ள நபரிடம் விசாரித்தபோது அவரது முன்னால் காதலன் பாலமுருகன் என்பவர்தான் பொக்கிஷமேரியை அழைத்து வந்தது தெரிவந்துள்ளது.
பாலமுருகனும் பொக்கிஷமேரியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து 8 மாதங்களுக்கு முன் பாலமுருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. மீண்டும் பொக்கிஷமேரியிடம் பேச வேண்டும் என தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்ற போது தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ளுமாறு நச்சரித்ததால் பொக்கிஷமேரியின் தலையில் குக்கரால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை டிராலி பேக்கில் வைத்து காரில் கொண்டு சென்று எரித்துள்ளார். இதனை கண்டுபிடித்த பொலிசார் பாலமுருகனை கைது செய்துள்ளனர்.