இலங்கை குண்டுவெடிப்பில் சிறுவனுக்கு பறிபோன கண்பார்வை : வலியால் துடிக்கும் சிறுமி…. மனம் வலிப்பதாக தாய் கண்ணீர்!!

521

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் 50 குழந்தைகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிகுண்டு தாக்குதலில் பல குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திடுனி நிகன்ஷா என்ற சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல்நிலை மருத்துவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் திடுனி தனது பேசும் திறனை இழந்துள்ளார்.

அதே போல 7 வயது சிறுவன் ஒருவனுக்கு கண்பார்வை பறிபோகியுள்ளது. 4 வயது சிறுமி கோமா நிலையில் உள்ளார். இதே போல பல சிறார்கள் தீக்காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பிகுனி (7) என்ற சிறுமியும் குண்டுவெடிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வலியால் துடித்து வருகிறார்.

குண்டுவெடிப்பில் பிகுனியின் உடலை உலோக துண்டுகள் துளைத்துள்ளன. அவள் வாயிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் சாப்பிட முடியாமல் தவிக்கிறார். இது குறித்து பிகுனி தாய் கூறுகையில், மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை கூட பிகுனியால் சாப்பிடமுடியவில்லை, அவள் தவிப்பதை பார்த்தால் மனது வலிக்கிறது என கூறினார்.

இப்படி பல குழந்தைகள் உடலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் பல குழந்தைகள் மனதாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.