இந்தியாவில் வேறு சாதி இளைஞரை மகள் திருமணம் செய்ததால் அவரை ஆட்களை வைத்து சுட்டு கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகள் மம்தா (18). மம்தா ரமேஷின் சொந்த மகள் கிடையாது. அவருக்கு இரண்டு வயதாக இருக்கும் போது ரமேஷ் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில் மம்தா இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு அவரை திருமணம் செய்தார்.
இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ரமேஷ் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் மம்தாவின் கணவரை கைது செய்தனர்.
அதன் பின்னரும் அப்பாவுடன் மம்தா வரவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்பாக மம்தா நீதிமன்றத்துக்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த ரமேஷ், மகளை தன்னுடன் வந்துவிடும்படி கூறினார், ஆனால் இதற்கு மம்தா மறுத்துவிட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த ரமேஷ் சில ஆட்களை வைத்து மம்தாவை கொல்ல முடிவெடுத்தார்.
பின்னர் இரண்டு பேர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்த நிலையில் மம்தாவை சுட்டு கொன்றனர், இதோடு அங்கிருந்த நரேந்தரகுமார் என்ற காவலரும் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் கைது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.