கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

இந்தியாவின் தெலுங்கானா மாகாணத்தில் தொடர்ந்து பெற்றோருடன் நேரத்தை செலவிடும் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவரது மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள குக்காட்டுப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் குமார் சவுத்ரி மற்றும் பிரேம் தேவி தம்பதிகள்.

32 வயதான குமார் சவுத்ரி நகை வியாபாரம் செய்து வந்துள்ளார். சமீப காலமாக அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இதனால் தமது மனைவியை தங்களது இரண்டு பிள்ளைகளுடன் குமாரின் பெற்றோர் வீட்டில் சென்று தங்க கலந்து பேசியுள்ளனர்.
ஆனால் இது பிரேம் தேவிக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியுள்ளது. தமது கணவரிடம் தம்மால் அங்கு சென்று குடியிருக்க முடியாது என மறுத்துள்ளார்.
இருப்பினும் குமார் தொடர்ந்து தமது பெற்றோருடன் அதிக நேரத்தை செலவிட துவங்கினார். இது பிரேம் தேவிக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது.
ஞாயிறன்று பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார் பிரேம் தேவி.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், எண்ணெயை ஊற்றிய பிரேம் தேவி மீது கொலை முயற்சிக்கு வழக்குப் பதியப்பட்டுள்ளது.