சென்னை…..

சென்னை வேளச்சேரி அடுத்த எஸ்.கொளத்தூர், விநாயகபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(48). கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பார்வதி கடந்த 2009ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து, செல்வம் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது மூத்த மகன் கவியரசுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக பலமுறை தந்தையை கண்டித்துள்ளார். ஆனால், இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், வெளியே சென்று விட்டு கவியரசு வீட்டிற்கு வந்தார்.

அப்போது, தந்தை கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார். இதனால் மகனுக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கவியரசு காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தனது தந்தையின் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கவியரசு தானாக பள்ளிக்கரணை காவல் நிலையம் வந்து சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.