காதல் தொல்லை… ஈவ் டீசிங் கொடுமை… பரபரக்கும் கல்லூரி மாணவி மரண வழக்கு : நடந்தது என்ன?

568

திருச்சி….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19) . இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில், மாணவியை வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும் இதனால் மன உளைச்சலுக்கான அம்மாணவி, அவரை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12ஆம் தேதி தனது நண்பர்களுடன் வந்து மாணவியை வழிமறைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாகவும்,

இதனால் தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தாய் சாந்தி பெல் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் போலீசாரை கண்டித்து உடலை வாங்க மறுத்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்களிடம் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.