கேரளாவில் இயற்கையின் கோரத்தாண்டவம் : மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த செயல்!!

471

 

கேரளாவில் தன் மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு அதற்கான பணத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்த பத்திரிகையாளரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவின் கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித்தவிக்கிறது. நிலச்சரிவுகளும் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளமும் சாப்பாட்டுக்கு வழியில்லாத குழந்தைகளின் அழுகைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்தவண்னம் உள்ளது. இயற்கையின் கோரத்தாண்டவத்தால் சிக்கி பரிதவிக்கும் கேரளத்துக்கு அண்டை மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன.

இந்தநிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் ஒருவரின் செயல், பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அங்குள்ள தேசாபிமானி என்ற பத்திரிகையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோஜ். இவர் தனது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்திருந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை, கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திய மனோஜ்,

அந்தப் பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் வழங்கியுள்ளார்.

இந்த முடிவை மணமகன் வீட்டாரும் வரவேற்றனர். இது தொடர்பாக மனோஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், `என் மகள் தேவி மற்றும் வழக்கறிஞர் சுதாகரன் ஆகியோருக்கு வருகிற 19-ம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கேரளாவின் இயற்கைப் பேரிடரைக் கருத்தில் கொண்டு நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வைத்தோம். இருவீட்டாரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு, நிச்சயதார்த்தத்துக்காகச் சேர்த்து வைத்த பணத்தை வழங்கினோம்’ என்று பதிவிட்டுள்ளார்.