கௌசல்யா

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா – சங்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி நடந்தது. இதில், இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கௌசல்யா பலத்த காயமடைந்தார்.

உடல்நலம் பெற்றுவந்த கௌசல்யா ஜாதி மறுப்பு போன்ற சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், சக்தி என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு ஒரு தரப்பில் இருந்து ஆதரவும், மறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் வந்தது. இதற்கெல்லாம் தன்னுடைய சமூகப்பணி பதில் சொல்லும் என கௌசல்யா தெரிவித்தார்.

இந்நிலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் சொந்த ஊரான குமாரலிங்கத்தில் உள்ள சிலர் கௌசல்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கௌசல்யா வீட்டில் வெளியாட்கள் யாரும் வந்து தங்க காவல்துறை அனுமதியளிக்கக்கூடாது. சங்கரின் இரத்தம் காய்வதற்குள் கௌசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கௌசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சங்கரின் பெயரை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இனி தொடரக்கூடாது என்றும் தீர்மானம் போட்டுள்ளனர்.

மேலும் கிராமத்தினர் கூறியதாவது, சங்கர் மரணத்திற்கு பின் கௌசல்யா சங்கரின் குடும்பத்தோடு மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் இருந்தது எங்களுக்கே சந்தோஷமாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நடத்தையில் சிறிய மாற்றம் தெரிகிறது. கடந்த வாரம் கூட இரண்டு பெண்கள் கௌசல்யாவின் குடும்பத்தில் வந்து தங்கினர்.

அந்தப் பெண்களைத் தேடி இரவில் பொலிசார் வருகின்றனர். அவர்கள் நல்லவர்கள் என்றால் இரவில் அவர்களை ஏன் பொலிஸ் தேடி வர வேண்டும்..? கௌசல்யா சில கட்சிகள், அரசாங்கத்திற்கு எதிரான அமைப்புகளோடு தொடர்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிக்கிறார்.

இதுமட்டுமின்றி கௌசல்யா நடத்தும் பறை வகுப்புகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கிராம கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கும், சங்கரின் குடும்பத்திற்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.