
தமிழகத்தில் சினிமா துணை நடிகைக்காக வீடு புகுந்து முதியவரை மிரட்டி காசோலை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், திலகவதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா (72). கட்டுமானத் தொழில் செய்து வந்த இவர் தற்போது தன்னுடைய மகனான கிறிஸ்டோபர் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இவர்களின் வீட்டிற்குள் புகுந்த காவல் ஆய்வாளர் தாம்சன், காஞ்சிபுரம் மாவட்ட விசிக செய்தித் தொடர்பாளர் பாண்டியன் மற்றும் அவரது மனைவியும் டிவி நடிகையுமான சாஜினி ஆகியோர், உன் மகன் எங்கே என்று கேட்டு அவரை மிரட்டியுள்ளனர்.
அப்போது அவர் இல்லை என்று கூற, உடனடியாக 10 லட்சம் ரூபாய் கொடு, இல்லையென்றால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
அவர் ஒரு ஆய்வாளராக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா என்று கேட்க, உடனே அவர் நான் ஒரு ரவு ஆய்வாளர், இங்கிருக்கும் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
அதன் பின் வலுக்கட்டாயமாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை எழுதி வாங்கி சென்றுள்ளனர். இதையடுத்து மறுநாள் முத்தையா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல் ஆணையர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட தாம்சன், பாண்டியன் அவரது மனைவி சாஜினி ஆகியோர் ரவுடிகளுடன் வந்து காசோலையை மிரட்டி எழுதி வாங்கியது உறுதியானது.
இதையடுத்து தாம்சன், விசிக பிரமுகர் பாண்டியன், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.