ராணுவ வீரர்

தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்ததாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பருத்திக் காட்டுவிளையை சேர்ந்த ஜெகன் (38) 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் தீவிரவாதிகள் சுட்டதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யாததால் உறவினர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து ராணுவ வீரர்களிடம் கேட்டனர்.

அப்போது தான் ஜெகன் மரணம் வீரமரணம் அல்ல என்பதும் சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இதையடுத்து அந்த வீரரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகனின் உறவினர்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மூலம் ராணுவ அதிகாரிகளிடம் ஜெகன் சாவில் உள்ள மர்மத்துக்கு விளக்கம் கேட்டுள்ளனர்.