பிச்சைக்காரராக இருந்தவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் மக்கள்… ஒரே வாரத்தில் மாறிய வாழ்க்கை : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

493

ஆந்திர மாநிலம்….

ஆந்திர மாநிலத்தின் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வானவர்கள் யாரும் அரசு பள்ளி ஆசிரியர் ஆக முடியவில்லை.

இவ்வழக்கு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார். ஏழ்மை இவரை வாட்டியது. இவர் அணிய சரிவர துணி கூட இல்லை.

இவரது நிலைமையை பார்த்து யாரும் துணி வாங்கவும் முன் வரவில்லை. பெற்றோரும் இறந்து விட்டனர். அதனால் அனாதை ஆனார். தான் வசித்து வரும் பாழடைந்த வீட்டைத் தவிர வேறு எதுவும் இவரிடம் இல்லை.

சில நாட்கள் பிச்சை எடுத்தும் பிழைத்து வந்தார். இந்நிலையில், 1998ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

அதன்படி, கேதாரேஸ்வர் ராவுக்கும் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்தது. இதனை பார்த்து ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்தார் கேதாரேஸ்வர் ராவ். தன்னுடைய வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தை தவிர வேறு எதையுமே பார்க்காத அவர், முதன் முறையாக தான் கண்ட கனவு நிறைவடையும் நாள் வந்ததை அறிந்ததும் முதலில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

தற்போது, கேதாரேஸ்வர் ராவுக்கு அரசு ஆசிரியர் பணி உத்தரவு கிடைத்ததும், அவர் வசிக்கும் நீதி கிராமமே மகிழ்ச்சியடைந்தது. என்றாவது மாஸ்டர் ஆகி விடுவேன் என கேதாரேஸ்வர் ராவ் அடிக்கடி கூறி வந்ததால், அவரை அந்த கிராமத்து இளைஞர்கள் மாஸ்டர் என்றே கிண்டல் செய்துள்ளனர்.

தற்போது அதுவே உண்மையாகிவிட்டது என அந்த ஊர் இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் கூறுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இவரை கண்டுகொள்ளாத கிராம மக்கள், இப்போது கேதாரேஸ்வர் ராவை தாங்கு, தாங்கு என தாங்குகின்றனர்.