நிர்மலா தேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியிடம் மரண பயத்தை ஏற்படுத்தி வாக்குமூலம் பெற்றப்பட்டதாக பேராசிரியர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும்தான் காரணம் என பேராசிரியர் நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் திறந்த வெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் முருகன், மரண பயத்தை ஏற்படுத்தி நிர்மலா தேவியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தனக்கும், தனது குடும்பத்தினக்கும் நீதிமன்றம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மூளைச் சலவை செய்ய நிர்மலா தேவி சிறுமியல்ல , 50 வயதான கிழவி என ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கூறியுள்ளார்.