மாயமான பெண் மதபோதகர்… ஆடுமேய்க்கச் சென்றவர் பார்த்த பயங்கர சம்பவம்!!

355

சென்னை….

சென்னை அகரம் தென் எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி தெருவை சேர்ந்தவர் எஸ்தர். 55 வயதான இவர் மதபோதராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி எஸ்தர் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார். இதனால் அவரது மகள் ஏஞ்சலின் மிகுந்த கவலையடைந்திருக்கிறார். இதனையடுத்து, கடந்த 8 ஆம் தேதி தனது தாயை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

பெருங்குளத்தூரில் உள்ள சபைக்கு வழக்கமாக செல்லும் எஸ்தர், கடந்த 26 ஆம் தேதி பெருங்குளத்தூர் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என ஏஞ்சலின் காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எஸ்தரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை காவல்துறையினர் ஆய்வு செய்திருக்கின்றனர்.

மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், ஆடுமேய்க்க சென்றபோது பெண் ஒருவரின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் இதுபற்றி காவல்துறையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுவந்த போலீசார் அது எஸ்தரின் உடல் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, எஸ்தரின் உடலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பெருங்குளத்தூருக்கு சென்றதாக சொல்லப்பட்ட எஸ்தர், மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு எப்படி வந்தார் என்ற சந்தேகம் காவல்துறையினரிடையே எழுந்துள்ளது. மேலும், எஸ்தரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்திருப்பது அவரது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில், எஸ்தர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் காணாமல்போன பெண் மதபோதகர், எலும்புக்கூடாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.