
இந்தியாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் உடல்கள் மருத்துவமனைக்கு வெளியே வைத்து பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் கிழமை மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பெண்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு வெளியே இருந்த சாலையில் வைத்து மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இது குறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் கூறுகையில், செய்திகளில் வெளியானவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்