லீனா மரியா…

பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, மலையாளத்தில் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, இந்தியில் மெட்ராஸ் கஃபே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.

கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரை, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலியான நடிகை லீனா மரியா, மருந்து நிறுவனமான ரான்பாக்ஸியின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப் பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம்
கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் டெல்லியில்
தொழிலதிபர்களிடம் பல ஓப்பந்தங்களை முடித்து தருவதாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது தோழி லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.