கணவன்-மனைவி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நரேஷ் கோயல், தன் மனைவியுடன் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், அவர் விமானத்தில் இருந்து திடீரென்று இறககிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல். அந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் அவர் இருந்தார்.

மனைவியான அனிதா நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். நிதி நெருக்கடி காரணமாக அந்நிறுவனம் தடுமாறியது. வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமலும் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் நிறுவனம் திணறியதால், அனைத்து விமான சேவைகளையும் கடந்த மாதம் 17-ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதைத் தொடர்ந்து வங்கிகளின் நெருக்கடி காரணமாக, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அவர் மனைவியும் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கிரண் பவாஸ்கர், ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், நரேஷ் கோயல் தன் மனைவி அனிதாவுடன் துபாய் செல்வதற்காக மும்பை விமானநிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், புறப்பட இருந்த விமானத்தில் இருந்து அவர்களை கீழே இறக்கினர்.

காவல்நிலையத்தில் புகார் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.