அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி வீட்டிற்கே சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (24). இவருக்கும் ராஜ்குமார் (30) என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கார் டிரைவரான ராஜ்குமார் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பினார். பார்வதி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவி இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்னர் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பார்வதியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டார். இந்நிலையில் நேற்று இரவு பார்வதியை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார் அவருடன் பேசி கொண்டிருந்தார்.

பக்கத்து அறையில் பார்வதியின் தந்தை தங்கவேலும், ருக்மணியும் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு ராஜ்குமார் பார்வதியுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு ஆத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக குத்தி கொலை செய்தார். பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பெற்றோர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பதுங்கியிருந்த ராஜ்குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.