அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருத்தணியை சேர்ந்தவர் துர்கன். இவருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபிரியா என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

சிவபிரியாவிற்கு ஏற்கனவே ஆந்திராவை சேர்ந்த ராமலு என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிவபிரியா ஆந்திராவிற்கு அடிக்கடி சென்று முதல் கணவர் ராமலு மற்றும் குழந்தைகளை பார்த்து வந்ததால் துர்கனுடன் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு சென்ற சிவபிரியா இரு குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த துர்கன் சிவபிரியாவிடம் தகராறு செய்தார்.

பின்னர் சிவபிரியா தனது அறைக்கு சென்று நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் துர்கனும் அவரது தாயார் விஜயாவும் சேர்ந்து, அவர் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் நண்பர் லோகேஷை வீட்டிற்கு அழைத்த துர்கன் இது குறித்து கூறினார். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் துர்கனிடம் விசாரித்த போது குடும்ப தகராறில் சிவபிரியா தற்கொலை செய்ததாக கூறினார்.

ஆனால் அவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து துர்கன், விஜயா, கொலைக்கு உதவியதாக நண்பர் லோகேஷ் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.