மத்திய பிரதேசத்தில் சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தையே நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தல் உள்ள சைன்புர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் லால். 52 வயதான இவருக்கு லக்ஷ்மி என்ற 19 வயது மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் லக்ஷ்மி பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜ்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் லக்ஷ்மியின் பெற்றோர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தங்களின் காதலை கைவிட மறுத்த லக்ஷ்மியும் ராஜ்குமாரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் லக்ஷ்மி. இதனையறிந்த அவரது தந்தை லக்ஷ்மியை விரட்டிச் சென்றார்.
எவ்வளவோ பேசி மகளை வீட்டிற்கு அழைத்து வர முயன்றார் சுந்தர்லால். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த லக்ஷ்மி தந்தையுடன் செல்ல மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பா அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் வெளியே வந்தார். இதனைக் கண்ட லக்ஷ்மி விபரீதமாக ஏதோ நடக்கப்போகிறது என்பதை அறிந்து உயிர்பிழைக்க ஓட்டம் பிடித்தார்.
விடாமல் துரத்தி சென்ற தந்தை சுந்தர்லால் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்த லக்ஷ்மி தரையில் உருண்டு உயிர் பிழைக்க போராடினார்.
ஆனாலும் சற்று நேரத்தில் உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் லக்ஷ்மி. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சுந்தர் லால் மற்றும் அவரது சகோதரரை கைது செய்தனர்.
நடு ரோட்டில் இந்த சம்பவம் நடந்த போதும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தனர்.
காதலனுடன் வாழ ஆசைப்பட்ட மகளை சாதி வெறியால் தந்தையே உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.