தனிமையாக 22 ஆண்டுகள் காட்டில் வசிக்கும் விசித்திர மனிதன்

521

அமேசன் காட்டில் வனவாசி ஒருவர் 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேஷில் அமேசன் காடுகளில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான வனவாசி மக்கள் வசித்து வருகிறார்கள்.

அமேசன் காடுகளை அழித்து விவசாய பண்ணைகளாக மாற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பண்ணை களை உருவாக்குபவர்கள் அந்த காடுகளில் வசிக்கும் காட்டு வாசிகளை கொன்று விடுகிறார்கள்.

இவ்வாறு அங்குள்ள ரொண்டோனியா பகுதியில் 1996ஆம் ஆண்டு விவசாய பண்ணை உருவாக்கப்பட்ட போது அந்த இடத்தில் 7 பேர் கொண்ட வனவாசிகள் வசித்து வந்தனர். அவர்களில் 6 பேரை விவசாய பண்ணை அமைத்தவர்கள் கொன்று விட்டனர்.

அதில் ஒருவர் மட்டும் தப்பினார். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உள்ளது. அந்த காட்டுக்குள் குறித்த வனவாசி 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

வெளியாட்களை கண்டால் காட்டுக்குள் உள்ளே ஓடி ஒளிந்து கொள்கிறார்.குறித்த நபர் புல்- புதர்களை கொண்டு சிறு குடிசை அமைத்து வசித்து வருகிறார்.

அவர் வசிக்கும் பகுதிக்கு யாரும் சென்று தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரேஷில் அரசு தடை விதித்துள்ளது. அவரது செயற்பாட்டை பிரேஷில் புனாய் குழுமம் என்ற அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சமீபத்தில் அவர் கோடாரி கொண்டு ஒரு மரத்தை வெட்டும் காட்சியை தூரத்தில் இருந்து வீடியோ மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.