மனைவி அழுதபோது மகிழ்ச்சியாக இருந்தது : மறுஜென்மம் எடுத்த மனைவியை கண்டு நெகிழ்ந்த கணவன்!!

753

கேரளாவில் மனைவி கோமாவிலிருந்து மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி வருவது குறித்து கணவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

கோட்டயம் மாவட்டம், வழூவூரைச் சேர்ந்த பெத்தனா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்.

தலையில் அடிப்பட்டதில் கோமா நிலைக்கு சென்ற பெத்தனாவுக்கு கடந்த 14-ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு பெத்தனாவிடம் ஏற்பட்ட மாற்றம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில், இப்போது குழந்தைக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியடையும் அளவுக்கு பெத்தனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து பெத்தனாவின் கணவர் அனூப் கூறுகையில், மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த எங்கள் இல்லற வாழ்க்கைக்குப் பரிசாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகன் பிறந்தான்.

இரண்டாவதாக என் மனைவி பெத்தனா கர்ப்பமான போது தான் வழுக்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அவர் உயிர் பிழைப்பதே கடினம் என கூறிய நிலையில் நினைவு திரும்பாமல் பல நாள்கள் வென்டிலேட்டரில் இருந்தாள் பெத்தனா. பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்து அவரை பார்த்துகொண்டேன்.

பத்தாவது மாதம் பெத்தனாவை டெலிவரிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். கடந்த 14-ம் திகதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு எல்வின் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

குழந்தை அழும்போதும் பால் குடிக்கும்போதும் என் மனைவி பெத்தனாவின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. கோமா நிலையில் இருந்த என் மனைவியின் முகத்தில் பல உணர்ச்சிகள் தென்படத் தொடங்கின.

பெத்தனாவுக்குப் பழைய நினைவு திரும்பியிருக்கிறது. எந்தக் கணவனுக்கும் மனைவி அழுதால் மகிழ்ச்சி ஏற்படாது. ஆனால், என் மனைவி அழுதபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறந்த குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்பதுபோல இருந்தது

இப்போது சிரிப்பு, அழுகை என தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறாள்.

படுத்த படுக்கையாக இருந்த அவள் இப்போது வீல் சேரில் உட்காருகிறாள். என் மனைவி பெத்தனாவும் எனக்குக் குழந்தையாகவே மாறிவிட்டாள்

பெத்தனா விரைவில் முழுமையாக குணமடைவார் என்று நம்பிக்கை உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.