கடப்பாரையால் அடித்து மனைவி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1009

சென்னை…

சென்னை, குன்றத்தூர் காலடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45) . இவர் தனியார் கிளப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அலமேலு (42), பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்த அலமேலு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இவர்களுக்கு மோனிஷா, வசுந்த்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் சம்பவத்தன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் ரமேஷ் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்தனர்.

இந்நிலையில், அவரது வீட்டில் அலமேலு அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர் .கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டில் இருந்து வெளியே வந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமேலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த அலமேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியின் நடந்தையில் சந்தேகமடைந்து உண்டான சண்டையில் அலமேலுவை ரமேஷ் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து ரமேஷ் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.