அமெரிக்காவில் மரணமடைந்த மகள்.. இந்தியாவில் மன்றாடும் பெற்றோர் : நடந்தது என்ன?

1051

உத்தர பிரதேசம்…

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு தனது கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கிறார் மன்தீப் கவுர்.

இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில் கூறியிருந்தார் மன்தீப்.

மேலும், தனது கனவர் தன்னை தினந்தோறும் தாக்கி வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்த அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயிரிழந்த தங்களது மகளின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உதவி செய்யும்படி கண்ணீருடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது மந்தீப் கவுரின் குடும்பம்.

இதுபற்றி பேசிய மந்தீப் கவுரின் சகோதரர் சந்தீப்,”அமெரிக்காவில் உயிரிழந்த எனது சகோதரிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? எனது சகோதரியின் உடல் எப்படி வைக்கப்பட்டுள்ளது? இதனை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைக்கிறோம்.

உடனடியாக உடலை இந்தியா கொண்டுவர அரசு அதிகாரிகள் உதவ வேண்டும். நாங்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். ஒருவேளை சகோதரியின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டால் நாங்கள் உடனடியாக அமெரிக்கா செல்ல உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.

ராஜ்யசபா எம்பியும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகவ் சத்தா இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் அரசு தரப்பில் இதுகுறித்து பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர் மன்தீப் கவுரின் குடும்பத்தினர்.