ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொன்று புதைப்பு : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!!

547

மந்திர சக்திக்காக ஒரே குடும்பத்தில் நான்கு பேர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகில் உள்ள முண்டன்முடியைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(52)-சுசிலா(50).

இந்த தம்பதிக்கு அர்ஷா (21), அர்ஜுன் (19) என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த கிருஷ்ணன் மாந்தீரிக தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் பால் வாங்க வெளியே வரும் கிருஷ்ணன், கடந்த சில தினங்களாக வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் உள்ளே இரத்தக் கறை இருந்ததால், அதிர்ச்சியடைந்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தரையிலும் சுவரிலும் ரத்தக்கறை இருந்ததைக் கண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சுத்தியல் ஒன்றும் ரத்தக் கறை படிந்த நிலையில் இருந்துள்ளது. அதன் பின் வீட்டின் பின்னே சென்று பொலிசார் பார்த்த போது, குழி ஒன்று புதிததாக தோண்டப்பட்டு, மண் மூடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த பொலிசார் அதை தோண்டி பார்த்த போது, கிருஷ்ணனின் உடல் இருந்துள்ளது. அதற்கு கீழே மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் உடல்கள் இருந்துள்ளது.

இவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு இருந்ததால், சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்தனர்.

அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த 30 பவுன் சவரன் நகைகள் வேறு காணமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து பொலிசார் அங்கு நடத்திய சோதனையில் 4 போன்கள் கிடைத்துள்ளது.

அதில் ஒரு போன் மட்டும் ஆக்டிவில் இருந்ததால், அதில் யார், யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அதில் கிருஷ்ணனின் உதவியாளர் அனீஷிடம் விசாரித்த போது, இவரும், இவரது நண்பருமான லிபீசும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணனின் உதவியாளரான அனிஷ் தனியாக மாந்திரீக தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் அவர் செய்யும் பூஜைகள் எல்லாம் சரியாக போகவில்லை.

இதற்கு காரணம் கிருஷ்ணன் தான், அவரை கொன்று அவரது மந்திர சக்தியை, அது தொடர்பான பொருட்களையும் கைப்பற்ற நினைத்துள்ளார்.

இதனால் கடந்த 12-ஆம் திகதி கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்ற இந்த இரண்டு பேரும், முதலில் வீட்டின் மின்சாரத்தை நிறுத்தியுள்ளனர்.

அதன் பின் வீட்டில் இருந்த கன்றுக் குட்டியை குத்தியதால், அது சத்தம் போட்டுள்ளது. இதனால் கிருஷ்ணனும் அவரது மனைவியும் வெளியில் வந்த போது, இரண்டு பேரையும் இவர்கள் தாக்கியுள்ளனர்.

இவர்களின் சத்ததைக் கேட்டு பிள்ளைகள் ஓடி வர அவர்களையும் கொலை செய்துள்ளனர். இந்த கொலை திட்டத்தை அவர்கள் 6 மாதத்திற்கு முன்பே திட்டமிட்டிருந்தனர் என்று பொலிசார் கூறியுள்ளனர்.