சூட்கேஸில் கஞ்சா : பல ஆண்களுடன் பழக்கம் : யார் இந்த இளம்பெண்?

739

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த போரூர் சிக்னல் அருகே கையில் சூட்கேசுடன் இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். அங்கு விடுதி எடுத்து தங்குவதற்காக வந்திருந்த அவரை, மர்ம நபர்கள் வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் தட்டிக் கேட்க, பயந்து போன மர்ம நபர்கள் குறித்த பெண்ணை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார், தகவலறிந்து விரைந்து வந்த வளசரவாக்கம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அந்த சூட்கேஸில் கஞ்சா இருந்தது தெரியவந்தது, இதனால் அப்பெண் மீது சந்தேகமடைந்த பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா(வயது 23) என்பதும், ஏற்கனவே இருமுறை ஆந்திர பொலிசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

விசாரணையில் தெரியவந்த தகவல்கள், ரேணுகா அடைக்கப்பட்டிருந்த சிறையில் சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி(வயது 65) என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஜாமீனில் வெளிவந்து பெரும்பாக்கத்தில் உள்ள முத்துலட்சுமியின் வீட்டில் ரேணுகா தங்கியுள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தேவசகாயத்துக்கும், ரேணுகாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் முத்துலட்சுமி திருமணம் செய்து வைத்தாலும், குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இதற்கிடையே ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவர தேவசகாயத்துக்கு ரேணுகா உதவியுள்ளார். கஞ்சா வியாபாரம் சூடுபிடிக்க, பல ஆண்களுடன் ரேணுகா பழகி வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பில் கணவன்- மனைவிக்கு சண்டை வர, ரேணுகாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து நிர்மல் என்பவருடன் சேர்ந்து ரேணுகா கஞ்சா கடத்தி, கைநிறைய பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரேணுகா சூட்கேஸில் கஞ்சாவை கொண்டு வந்து நிர்மலுக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது தான் ரேணுகாவிடமிருந்து மர்ம நபர்கள் சூட்கேஸை பறிக்க முயன்றுள்ளனர், பொதுமக்கள் கூடியதால் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தொழில் போட்டியில் இவ்வாறு நடந்ததா? இதில் தொடர்புடையவர்கள் யார் யார்? என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்