இறைவனுக்கு அடுத்து என்னுடைய நண்பன்: கல்லூரி மாணவிகளிடம் நெகிழ்ந்த இளையராஜா

605

சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து கல்லூரி மாணவிகளிடம் நெகிழ்ந்துள்ளார்.

உலக இசையமைப்பாளர்கள் பலரையும் தன்னுடைய, ஒப்பில்லாத இசைத்திறமையால் திரும்பி பார்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. இவரது இசையில் பாட இன்றும் பல பாடகர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் வெளிநிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ள விரும்பாத இளையராஜா, சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பின்னர் மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்து வந்த இளையராஜா, தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் விவரித்துள்ளார்.

அப்பொழுது இளையராஜா தன்னுடைய நண்பன் குறித்து பேச ஆரம்பித்ததும், அரங்கமே ஒரு நிமிடம் அமைதியாக யார் அந்த நபர் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான் என இளையராஜா கூறியதும், இது அனைவரும் அறிந்த ஒன்று தானே என நினைத்து மீண்டும் பழைய நிலைக்கே ஆரவாரத்துடன் அரங்கம் திரும்பியுள்ளது.