தகாத உறவின் காரணமாக கணவனை தீர்த்து கட்டிய மனைவி : உறவினர்கள் செய்த அதிர்ச்சி செயல்!!

652

தமிழகத்தில் தகாத உறவின் காரணமாக கணவனை கொலை செய்த மனைவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (30). ஆட்டோ டிரைவரான இவருக்கு சந்திரமதி (27) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் திகதி கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி கிராமத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே செல்வம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனால் இது குறித்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது செல்வம் வீட்டுக்கு அதே கிராமத்தை சேர்ந்த அவரது நண்பரான ஆனந்தன் (35) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இதனால் ஆனந்தனுக்கும், சந்திரமதிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த செல்வம் மனைவியை கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த சந்திரமதி செல்வம் இருக்கும்வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்றும், அதனால் செல்வத்தை தீர்த்துக்கட்ட வேண்டும் எனவும் ஆனந்தனிடம் கூறியுள்ளார்.

அதன் பின் ஆனந்தனின் கூட்டாளிகளான சுரேஷ் (30), ஸ்ரீதர் (30), கார்த்திக் (22), பிரகாஷ் (20) ஆகியோர் சவாரிக்கு அழைப்பது போன்று செல்வத்தை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சந்திரமதி, ஆனந்தன், சுரேஷ், ஸ்ரீதர், கார்த்திக், பிரகாஷ் ஆகியோரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த சந்திரமதி அவரது தாய் வீடான திருக்கழுக்குன்றம் அடுத்த எலுமிச்சம்பட்டு கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை சந்திரமதிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் யாருக்கும் தெரியாமல் ஆயப்பாக்கம் கிராமத்துக்கு சென்றுள்ளார்.

இந்த தகவல் செல்வத்தின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு திரண்ட ஏராளமானோர் சந்திரமதியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனால் நிலைகுலைந்த சந்திரமதி அந்த இடத்திலே பரிதாபமாக இறந்துள்ளார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், இது குறித்து 15 பேரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.