தேர்வு எழுத துணிச்சலோடு ஆற்றைக் கடந்த மாணவி…. தோள் கொடுத்து உதவிய சகோதரர்கள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

282

ஆந்திராவில்…..

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறு ஏரி மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் தங்கள் இயழ்பு வாழ்கையை மேற்கொள்ளமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், ஆற்றைக் கடந்து கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு எழுதச் சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில விசாகப்பட்டினம் அருகே கஜபதிநகரத்தைச் சேர்ந்தவர் தத்தி கலாவதி(21). இவர் விசாகப்பட்டினத்தில் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. மழையால் கால்வாய்கள் நிரம்பியதால் ஆற்றைக் கடந்து தேர்வு எழுதச் செல்லமுடியாது என பெற்றோர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் மாணவி கலாவதியோ எப்படியாது தேர்வு எழுதியே தீரவேண்டும் என வீட்டில் அடம்பிடித்து தேர்வு எழுதச்செல்ல அனுமதி வாங்கியுள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமையன்று சகோதரர் மற்றும் உறவினர்கள் உதவியோடு தேர்வு எழுதச் செல்ல ஆற்றுப் பகுதிக்கு வந்துள்ளார்.

ஆற்றில் இறங்கிய பின்னர் வெள்ளத்தின் வேகம் அதிகமானதை உணர்ந்த மாணவி கலாவதி தொடர்ந்து ஆற்றைக் கடக்க முயன்றார். ஆனால், நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த கலாவதியிம் நிலையை உணர்ந்த மாணவியின் சகோதரரும், உறவினரும் உடனடியாக மாணவியை நீரில் ஆழத்தில் இருந்து மீட்டனர்.

பின்னர் மாணவியை தோளில் தூக்கி அமரவைத்து ஆற்றைக் கடக்க உதவி செய்தனர். இந்த சம்பவத்தை ஆற்றின் அக்கறையில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேர்வு எழுத விடாமுயற்சியோடு இருந்த மாணவியையும், அவருக்கு உதவிய சகோதரர் மற்றும் உறவினருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.