தொழிலபதிபர் கொடூர கொலை : அம்பலமான பெண்ணின் சதி திட்டம்!!

1406

செங்கல்பட்டு…..

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர், பகவதிபுரம் துங்கபத்ரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதில் செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்து வந்தார்.

அப்போது இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பகுதியில் பிரபல தாதாவாக இருந்த ஸ்ரீதர் என்பவருடன் செந்திலுக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. ஸ்ரீதர் மறைந்த பிறகு செந்தில்குமார் காஞ்சிபுரத்திலிருந்து, இடம் பெயர்ந்து பெருமட்டுநல்லூரில் குடியேறியுள்ளார். மேலும் அப்பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலை தொடர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில், செந்தில்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் பைக்கில் அழைத்துக்கொண்டு கடந்த 21ந் தேதியன்று காலை நந்திவரம் புத்துக்கோயில் எதிரே உள்ள எஸ்ஆர்எம் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு அருகிலுள்ள செல்வி நகரில் சென்று அவர் கொண்டிருந்தபோது அங்கே மறைந்து இருந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.

இதில் செந்தில்குமாருக்கு தலை, கழுத்து, முகம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்துள்ளது. இதில் செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதை கண்டதும் அந்த கும்பல் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செந்தில்குமாரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

செந்தில்குமார் விஜயலட்சுமி கூறிய ஆசை வார்த்தைகளில் நம்பி சுமார் 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டு விஜயலட்சுமியை செந்தில்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக அந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெறுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி இருந்த அம்பத்தூர் பகுதிக்கு சென்று தனது பணத்தை திரும்பி தருமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமி செந்தில் குமாரை மிரட்டி உள்ளார். மேலும் அங்கு ஒரு கும்பல் அலுவலகத்தில் வந்து செந்தில்குமாரை சூழ்ந்து கொண்டுள்ளது. உடனடியாக அவசர உதவி எண் 100க்கு கால் செய்து காவலர்களின் உதவியுடன் செந்தில்குமார் அங்கிருந்து திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதால் காவல்துறையினரின் சந்தேகம் விஜயலட்சுமி மீது திரும்பியது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் விஜயலட்சுமியை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.