கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்படஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்கள் கடத்தல் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

991

கலிபோர்னியா….

கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் கடந்த திங்கள்கிழமை நான்கு பேர் கடத்தப்பட்டனர்.

அந்த நான்கு பேர் 8 மாத பெண் குழந்தை மற்றும் அவரது பெற்றோர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 36 வயதான ஜஸ்தீப் சிங், 27 வயதான ஜஸ்லீன் கவுர் மற்றும் அவர்களது எட்டு மாத குழந்தை அருஹி தேரி மற்றும் 39 வயதான அமந்தீப் சிங் ஆகியோர் கடத்தப்பட்டதாக மெர்சிட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் தெற்கு நெடுஞ்சாலை 59 இன் 800 பிளாக்கில் இந்த கடத்தல் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடத்தல் நடந்ததாக கூறப்படும் இடம் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.

இதை அடுத்து சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் செயல்படுவதைக் கண்டால், உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் அட்ரே, தனது கலிபோர்னியா வீட்டில் இருந்து கடத்தப்பட்ட செய்தி வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது காதலியின் காரில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.