நெருக்கமாக பழகியதில் கர்ப்பம்… வேறு பெண்ணுடன் திருமண முயற்சி : கடைசி நேரத்தில் கர்ப்பிணி செய்த செயல்!!

1013

திண்டுக்கல்….

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒட்டுபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகபிரியாவுடன் அவரது உறவினரான திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமி (32) சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

இவருடன் பழக்கம் ஏற்பட்டு நாகப்பிரியா சின்னசாமி கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் சின்னச்சாமி நாக பிரியாவிடம் திருமண ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதாக தெரிகிறது.

இதனால் நாகபிரியா கர்ப்பிணியானார். தற்போது நாகபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் இன்று வாலிபர் சின்னசாமிக்கும் விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக நாகபிரியாவிற்கு தெரிய வந்துள்ளது.

இதனால் காவல் உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு போலீசாருடன் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு சென்று மணமகன் தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாகவும் தனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் போலீசார் காலையில் பேசிக் கொள்ளலாம் என அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை சின்னச்சாமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திருமண மண்டபத்திற்கு தனது பெற்றோருடன் வந்த நாகப்பிரியா மண்டபத்திற்குள் சென்று நியாயம் கேட்க மணமகன்  வீட்டாருக்கும் நாக பிரியா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து சென்ற போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஏற்கனவே நாகப் பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நாகப்பிரியாவையும் அவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு புதுமாப்பிள்ளை சின்னசாமி மற்றும் அவரது பெற்றோரை அழைத்து வந்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை செய்ததில் சின்னச்சாமி நாக பிரியாவை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். மேலும் தான் நாக பிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததால் போலீசார் இரு விட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

நாக பிரியாவை சின்னசாமி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாரிடம் சின்னசாமி குடும்பத்தார் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர்.

சினிமாவில் வரும் காட்சி போல் நிறைமாத கர்ப்பிணி கடைசி நேரத்தில் கல்யாண மண்டபத்தில் புகுந்து தன்னை ஏமாற்றிய வரை திருமணம் செய்து கொள்ள வைத்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.