கார் விபத்தில் பலியான கர்ப்பிணி தாய்.. 2 நாட்களாக கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை!!

636

அமெரிக்காவில் தாழ்வான பள்ளத்தாக்கில் சிதைந்து கிடந்த காரில் இருந்து, சடலமாக கர்ப்பிணி பெண்ணும், உயிருடன் இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Arkansas பகுதியில் உள்ள தாழ்வான பள்ளத்தாக்கிலிருந்து குழந்தை ஒன்று கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற ஒருவர் சத்தம் கேட்டு பள்ளத்தாக்கில் எட்டி பார்த்துள்ளார். கார் ஒன்று சிதைந்த நிலையில் இருப்பதை பார்த்து உடனைடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், காருக்கு அருகில் செல்லும்பொழுது, இடர்பாடுகளில் சிக்கி 1 மற்றும் 3 வயதுள்ள இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் காரின் முன் பகுதியில் இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றியுள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, விவரங்களை தெரிந்துகொள்வதற்காக உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை Kylen-ன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து மேற்கொள்ளபட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பே விபத்து நடந்துள்ளதும், அன்று முதல் காரில் சிக்கிய குழந்தைகள் தாயை எழுப்புவதற்காக உள்ளே அழுதுகொண்டே போராடியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் பலியான பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விபத்தில் இறந்த பெண்ணின் தந்தை James Holliman கூறும்பொழுது, என்னுடைய மகள் லிசாவிற்கு 25 வயது தான் ஆகிறது. அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் கருவுற்றிருப்பது கூட எங்களுக்கு தெரியாது. ஒரு விபத்தில் இரண்டு உயிர்கள் பறிபோயிருப்பது மிகுந்த மனவேதனையை தருகிறது என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.