இளம் பெண்ணின் திருமண வாழ்க்கையை கேள்வி குறியாக்கிய கேரள வெள்ளம் : அதன் பின் நடந்த நெகிழ வைக்கும் நிகழ்வு!!

536

வெள்ளத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நகை, பணம் போன்றவைகள் எல்லாம் அடித்து செல்லப்பட்டதால், பெரும் துயரில் இருந்த அந்த பெண்ணிற்கு டீ விற்பனையாளர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கேரளாவின் மூணாறு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே விஜயன்-முனியம்மா தம்பதி வசிக்கின்றனர். இவர்களது மூத்தமகளான சரண்யாவிற்கு வரும் செப்டம்பர் மாதம் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பெற்றோர் இரவு, பகலாக உழைத்து சிறுக, சிறுக நகைகளை சேர்த்தனர். திருமண திகதியும் குறிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி கேரளாவில் பெய்த கனமழையால் மூணாறு பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதில் விஜயனின் வீடு மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறி போனது.

குறிப்பாக திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நகைகள், பணம் முழுவதும் வெள்ளத்தால் பறிபோனது. அனைத்தையும் இழந்த விஜயனின் குடும்பத்தார், அங்கிருக்கும் முகாமில் நிர்கதியாக நின்றனர்.

பணம், நகைகள் பறிபோனதால் சரண்யாவின் திருமணம் கேள்விக்குறியானதால், குடும்பமே கடும் மன உளைச்சலில் தவித்தது.

இதை அறிந்த மூணாறில் டீ கடை நடத்தும் மரியான் என்பவர் தான் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயன் குடும்பத்தாரிடம் நேற்று கொடுத்துள்ளார்.

இது குறித்து மரியான் கூறுகையில், சரண்யாவின் திருமணத்திற்கு என்னாலான உதவியை செய்துள்ளேன். குறிப்பிட்ட திகதியில் அவருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால், அந்த குடும்பத்திற்கு கேரள, தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.