உயிரை பறிக்கும் சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் உணவுகள் !

830

உடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு.

மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.

அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை.

பின்னர் நோய் முற்றியவுடன் தான் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோம். திடீரென உங்களுக்கு சர்க்கரை வரக்கூடாது, அப்படியே வந்திருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்படியானால் இந்த முறையை பின்பற்றுங்கள்.

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தவிர்க்க
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் அவ்வகை உணவுகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவிர்த்திடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ரத்தச்சர்க்கரையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும்.

கேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாகற்காய்
பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் உள்ளது. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.

மஞ்சள்
கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. இதனை சீராக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தேவை அவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது.

இதனால் சர்க்கரை நோய் குறித்த பயம் உங்களுக்கு வேண்டாம். இந்த குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகமாக இருக்கின்றன.

நட்ஸ்
நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது.

நாவல் பழம்
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

நாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் குறைந்திடும்