சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள் : வெளியான புகைப்படத்தால் பரபரப்பு!!

786

சென்னையில் அமைந்துள்ள புழல் சிறையில் ஆயுள் கைதிகள் தங்கள் அறைகளை உல்லாச விடுதி போன்று மாற்றியுள்ளது புகைப்படமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் செல்போன், போதை மருந்து புழக்கம் தாராளமாக இருப்பதாக சமீப காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக புழல் சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.

அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் போடப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன.

இதனால் கைதிகள் உரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி தாங்கள் கேட்டதையெல்லாம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது அம்பலமாகியுள்ளது.

மட்டுமின்றி சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிறையில் இருக்கும் ரவுடிகள் அங்கிருந்தபடியே கொலைக்கு சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கைதிகள் போன் செய்து பேசி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.