கேரள மாநிலத்தில் பிரபாவதி என்ற தாய் தனது மகனை கொன்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 ஆண்டுகள் போராடி தூக்குதண்டனை வாங்கிகொடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயக்குமார். உதயக்குமாருக்கு ஒரு வயது இருக்கும்போதே தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதால், சிறு வயதில் இருந்த தனது மகனை கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார்.
உதயக்குமார் வளர்ந்தவுடன் கடை ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், 2005 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையின் போது தனக்கு கிடைத்த போனஸ் பணத்தை வைத்து அம்மாவுக்கு புடவை எடுக்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, சந்தேக வழக்கில் உதயக்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற பொலிசார், அங்கு வைத்து அவரிடம் இருந்த 4,000 ரூபாயை எடுத்துள்ளனர். இதனை திருப்பிதருமாறு உதயக்குமார் கேட்டபோது, பொலிசார் சேர்ந்து உதயக்குமாரை சித்ரவதை செய்து அடித்துள்ளனர்.
இதன்போது, உதயக்குமார் இறந்துவிட்டார், ஆனால் திடீரென மயங்கிவிழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், உதயக்குமாரின் தொடையில் உருளையால் உருட்டியதில் ரத்த நாளங்கள் உடைந்து அவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
தனது மகனின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பிரபாவதி குறித்த பொலிசார் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுமார் 13 ஆண்டுகள் நடைபெற்றது.
13 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு, உதயகுமாரை கொலை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது சி.பி.ஐ நீதிமன்றம்.
பொலிஸ் அதிகாரிகள் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பொலிஸ் அதிகாரி அஜித்குமார் மற்றும் முன்னாள் எஸ்.பி-க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபாவதி கூறியதாவது, ஒரு தாயின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தவறு செய்த காவல் துறையினருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அதுபோன்றே தண்டனை கிடைத்துள்ளது. என் கண்ணீருக்கு விடை கிடைத்துள்ளது. இனி நான் அழமாட்டேன் என கூறியுள்ளார்.