பலரையும் பிரம்மிக்க வைக்கும் தீவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

741

இரண்டாம் உலகப் போர் நடந்த போது நச்சு வாயு உற்பத்தி செய்யும் தீவாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒகுனோஷிமா.

அந்தத் தீவு இன்று முயல்களின் சரணாலயமாக மாறி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல, ஒகுனோஷிமா என்ற தீவின் பெயர் ரேபிட் ஐலண்ட் (முயல் தீவு) என்றும் மாறிவிட்டது.

1929 முதல் 1945-ம் ஆண்டு வரை இந்த இடம், நச்சு வாயு தயாரிக்கக்கூடிய ரகசிய இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக 6 ஆயிரம் டன் நச்சு வாயு ராணுவத்தினரால் இங்கே உற்பத்தி செய்யப்பட்டது.

வாயுவை பரி சோதனை செய்வதற்காக முயல்களை இங்கே கொண்டு வந்து, வளர்த்துள்ளனர்.

உலகப்போர் முடிந்ததும் எல்லாம் தலை கீழாக மாறியது. இங்குள்ள கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அங்கே இருந்த சில குடும்பங்களை வெளியே அனுப்பிவிட்டனர்.

ஜப்பானின் வரைப்படத்தில் இருந்தே ஒகுனோஷியா தீவு மாயமாகியிருந்தது. ஆனால், முயல்கள் மட்டும் தொடர்ந்து அந்தத் தீவிலேயே இருந்தன என்கிறார்கள் சிலர்.

முயல்கள் இந்தத் தீவுக்கு எப்படி வந்தன என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இன்று முயல்கள் ஒகுனோஷியா தீவை ஆட்சி செய்கின்றன.

முயல்களின் அழகை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

தீவில் இறங்கி, முயல்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தால் மனிதர்களை அவை சூழ்ந்துகொண்டுவிடுமாம். அவர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுமாம்.

சுற்றுலாப் பயணிகள் தரையில் உட்கார்ந்தால் மடி, தலை மீது ஏறி ஜாலியாக சேட்டைகள் செய்யுமாம். சிலரை அப்படியே படுக்க வைத்து, அவர்கள் மீது ஏறி விளையாடி மகிழுமாம்.

குறைந்த காலத்திலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தீவை நோக்கி வரவழைத்துவிட்டன இந்த அழகிய முயல்கள்.