அம்ருதா கணவரை கொலை செய்த கொலையாளி அதிரடி கைது!!

1102

அம்ருதா

தெலுங்கானா மாநிலத்தில் பிரணய் குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தலைமறைவாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ருதா எனும் இளம்பெண், மாற்று ஜாதி இளைஞரான பிரணாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், கூலிப்படையை ஏவி மகளின் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். இதற்காக ஒரு கோடி ரூபாய் வரை கூலிப்படைக்கு பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொது இடத்தில் வைத்து அம்ருதாவின் கண் முன்பே பிரணாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சிசிடிவி கமெராவில் பதிவானதைத் தொடர்ந்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கினர். இந்நிலையில், கொலையாளி பீகார் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு சென்ற பொலிசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் குற்றவாளியை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலையாளியின் பெயர் ஷர்மா என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொலைக்கு பின்னால் இருப்பவர்கள் குறித்து பொலிசர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.