அப்பெண்ணின் அறைகதவை எப்படி தட்ட முடியும்? எனது மரியாதை போய்விட்டது : நடிகர் தியாகராஜன் வேதனை!!

827

நடிகர் தியாகராஜன்

நான் ஐம்பது ஆண்டுகாலம் சேர்த்து வைத்த என் கௌரவத்தையும், மரியாதையையும் இந்த சம்பவம் கெடுத்து விட்டது மிகவும் வருத்தமாக உள்ளது என நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.

மீ டூ’ மூவ்மெண்ட் மூலம் பிரதிகா மேனன் என்ற புகைப்பட கலைஞர் நடிகர் தியாகராஜன் மீது சமீபத்தில் கூறிய கூறிய பாலியல் புகாருக்கு விளக்கம் அளித்தார் நடிகர் தியாகராஜன்.

அதில், இந்த சம்பவம் நடந்தது பெரம்பலூர் பக்கத்தில் உள்ள ரஞ்சன்குடி என்ற கோட்டையில். அந்தப் பெண் தவறாக கோயம்புத்தூர் பக்கத்தில் என்று கூறுகிறார். அந்த பெண் புகைப்பட கலைஞர் படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்கள் அப்ரண்டீஸ் ஆக வேலை செய்ய வந்தார்.

பிறகு மூன்றாம் நாள் அதிக ஜலதோஷத்தால் உடல்நலம் சரியில்லாமல் அந்தப் பெண் வேலைக்கு வரவில்லை. அவர் வீட்டிற்கு சென்று விட்டார். அதோடு அவருக்கும் எனக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடந்த இடம் கடும் குளிரான இடம்.

அங்கு நாங்கள் படப்பிடிப்பை மதியம் 4 மணிக்கு மேல் ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை படப்பிடிப்பு நடந்தது. இது இப்படி இருக்க நான் எப்படி அந்தப் பெண்ணின் அறைக்கதவை தட்டி இருக்க முடியும்.

யாரோ ஒருவர் எங்கிருந்தோ சமூக வலைத்தளத்தில் யார் மீதாவுது பாலியல் புகார் கூறினால், உடனே என்ன ஏது என்று கூட கேட்காமல் அப்படியே செய்திகளில் போட்டுவிடுகின்றனர். அது எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டவரை பாதிக்கிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஊடகத்தின் வழியே நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டால், அல்லது ஒருவர் புகார் கூறுகிறார் என்றால் சம்பந்தப்பட்ட இருவரிடமும் பேசிவிட்டு அதன்பிறகு செய்திகளை வெளியிடுங்கள்.

அந்தப் பெண் என்மீது கூறிய புகாரை நான் முழுவதுமாக மறுக்கிறேன். கண்டிப்பாக அந்த பெண் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என கூறியுள்ளார்.