மாணவியின் கொலையை மறைக்க முனி கொன்றுவிட்டது என நாடகமாடியது அம்பலம்!!

769

மாணவியின் கொலை

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு சுடுகாட்டு முனி பலியிட்டதாக கூறி நடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிவேல். சின்னப்பொன்னு தம்பதியினரின் இளைய மகள் மகள் ராஜலெட்சுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 22 ந்தேதி ராஜலெட்சுமி, வீட்டில் தனது தாயுடன் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வசித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் கொடுவாளுடன் வீட்டுக்குள் ஆவேசமாக புகுந்தார்.

ராஜலட்சுமியின் தலை முடியை பிடித்து இழுத்துச்சென்று வீட்டு வாசல் அருகே வைத்து அவரது தலையை துண்டித்து கொலை செய்தார். தலையை தூக்கிச்சென்று சாலையில் வீசி விட்டு உறக்க கூச்சலிட்ட படியே அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

சம்பவத்தை கண்ட அவரது தாய் அதிர்ந்து போனார். ரத்தம் தெறிக்க ஆவேசமாக காணப்பட்ட கொலையாளி தினேஷ்குமாரை காவல் நிலையத்தில் அமரவைத்து விட்டு, மாணவியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில் அகோரி போல ஆவேசமாக காணப்பட்ட தினேஷ்குமார், தன்னை சுடுகாட்டு முனி என்றும் தனக்கு மல்லிகை பூ வாடை பிடிக்காது என்றும் அதனால் அவளை முனி கொன்று விட்டது என்றும் கூறி அதிரவைத்தான். அதோடில்லாமல் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நாடகமாடி உள்ளான்.

2 நாட்களாக தினேஷ், சைக்கோ போல முரண்பாடாக பேசி, நடித்து காவல்துறையினரை ஏமாற்றி வந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவனது மனைவி சாரதாவிடம் விசாரித்த போது கொலைக்கான பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சாரதாவுடன் மாணவி ராஜலெட்சுமி அன்பாக பழகி வந்துள்ளார். இதனை சாதகமாக்கிக் கொண்டு தினேஷ், ராஜலட்சுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளான்.

சம்பவத்தன்று மனைவி வெளியில் சென்றிருந்த நேரம் வீட்டிற்கு வந்த மாணவி ராஜலட்சுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான் தினேஷ்.

அப்போது மனைவி சாரதா வந்துவிட்டதால் அவனிடம் இருந்து தப்பிய சிறுமி ராஜலெட்சுமி வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சாமி வந்தது போல நடந்து கொண்ட தினேஷ், தன்னுடைய லீலைகளை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடக்கூடாது என்பதற்காக ராஜலெட்சுமியை கொலை செய்து விட்டு முனி கொன்று விட்டதாக நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொலையாளி தினேஷை கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.