வைரமுத்துவின் சுயரூபத்தை வெளிப்படுத்து : மனைவிக்கு அவரது தோழி எழுதிய பரபரப்பு கடிதம்!!

1298

வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவின் மனைவி பொன்மணிக்கு அவரது கல்லூரி தோழி ஒருவர் எழுதியதாக இணையத்தில் வெளியான கடிதம் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.

சின்மயியை தன் அறைக்கு அனுப்புமாறு வைரமுத்து சொன்னதாக, அவரது தாயார் சொல்கிறார்… இவ்வளவு பெரிய விடயத்தை எந்த தாயும் பொய்யாக கூறமாட்டார்கள். எனவே அவர்கள் படும் வேதனைக்காவது நீ வாய் திறக்க வேண்டும்… உன் கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்து என்ற வகையில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

உன் காதல் திருமணத்திற்குப்பின் சில காலம் மட்டுமே உன்னோடு தொடர்பில் இருந்தேன். இப்பொழுது நடக்கும் விடயங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதுகிறேன்.

காதல் கணவரின் இதய சிம்மாசனத்தில் ராணியாக இடம் பெற்றதால்! பேராசிரியராக பாடம் புகட்டி உன் தமிழறிவை இளம் குருத்துகளுடன் பகிர்ந்து கொண்டே, குடும்பத்திற்கான பொருள் ஈட்டினாய். உன் காதல் கணவன் கலைத்துறையில் கால் பதிக்க உன்னால் முடிந்த தியாகங்களை செய்தாய். அழகான இரு மகன்களுடன் இனிய இல்லறம் நடைபெற்று வரும்போது எப்பொழுது உன் கணவர் தடம் மாறினார்?

சினிமாவில் புகழ் சேர்ந்த பின்னா? இல்லை அரசியல் தொடர்புடன் வந்த செல்வாக்கிற்கு பின்னா? உன் அறிவிற்கும் ஞானத்திற்கும் இந்த ஆணைவிட வேறு சிறந்த ஆண் கிடைத்திருப்பார். ஆனால் உன் அன்பு இவருக்கே என்று ஆன பிறகு வேறு என்ன யார் சொல்லி உன் மனத்தை மாற்றியிருக்க முடியும்.

திருமணத்திற்குப் பிறகு உன் திறமை குடத்திலிட்ட விளக்காக உன் புகழ் குன்றின்மேல் ஏறாமல் இருந்து விட்டது. அதற்கு யார் காரணம்? உனக்குத் துரோகம் இழைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது. பிறந்த வீட்டை முற்றும் பகைத்துக் கொண்டு அவரே எல்லாம் என்று வந்த உனக்கு எப்படி நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணிந்தார்?

அன்பும் அமைதியும் தவழும் உன் அழகிய முகம் வாடுவது காதல் மனைவிக்கு செய்யும் துரோகம் என்று அவருக்குத் தெரியவில்லையா? பாரதி சொன்ன புதுமைப்பெண்ணின் எடுத்துக்காட்டாக விளங்கிய நீ எப்படி அடங்கிப் போனாய்? குடும்ப அமைதிக்காகவா? இல்லை பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவா?

ஏதுவாக இருந்தாலும் நீ துணிந்து பேசும் காலம் வந்து விட்டது. உன்னை வழி நடத்தும் சாய்பாபா தான் உனக்கு துணிச்சலைக் கொடுத்து இப்பொழுது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு உண்மையான பதில் சொல்ல வைக்க வேண்டும்.

சின்மயி வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகப்பெரியது. அவருடைய அம்மா சின்மையியை தன் அறைக்கு அனுப்புமாறு வைரமுத்து சொன்னதாக சொல்கிறார். இவ்வளவு பெரிய விடயத்தை எந்தத் தாயும் பொய்யாக சொல்லமாட்டார்கள். அவர்கள் படும் வேதனைக்காவது நீ வாய் திறக்க வேண்டாமா?

இதுகாறும் பொறுமையாக வாழ்ந்து பூமாதேவி என்று பெயரை நீ பெற்றிருப்பினும் அந்தப் பூமியில் தான் உன் கணவரால் இம்சிக்கப்பட்ட மற்ற பெண்களும் வாழ்கிறார்கள். வைரமுத்துவின் பாலியல் கொடுமைகளைப் பதிவிடும் பெண்களின் குறைகளுக்கு செவிமடுத்து உன் கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்து.

நீ உண்மையை சொன்னால் உன் மகன்களின் ஆதரவு உனக்குக் கண்டிப்பாக இருக்கும். பல பெண்களை அவர் பிடியில் இருந்து காப்பாற்றியிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட தாயுள்ளம் கொண்ட நீ இப்பொழுது வெளிப்படையாக அவரைப் பற்றி சொன்னால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆறுதலாக இருக்கும்.

பொன்மணி வைரமுத்துவின் தோழி எழுதியதாக கூறப்படும் இந்த கடிதம் உண்மைதானா? அல்லது பொன்மணியின் தோழி பெயரில் யாரோ ஒருவரால் எழுதி வெளியிட்டதா என்ற சந்தேகத்தை இணையத்தில் சிலர் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.