இப்படியும் திருடர்கள் இருப்பார்களா : சிரிக்க வைக்கும் ஒரு சுவாரஸ்ய சம்பவம்!!

634

சுவாரஸ்ய சம்பவம்

திருடச் சென்ற இடத்தில் இப்போதைக்கு போதுமான பணம் இல்லை, பின்னர் வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என கடை உரிமையாளர் கூறியதைக் கேட்டு பின்னர் மீண்டும் வந்த திருடர்கள் பொலிசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று பெல்ஜியத்தில் நடைபெற்றுள்ளது.

பெல்ஜியத்தின் Charleroi நகரில் இருக்கும் இ-சிகரெட் கடையில் ஆயுதங்களுடன் நுழைந்த 6 திருடர்கள் பணம் கொடுக்குமாறு கடைக்காரரை மிரட்டினர்.

கடை ஊழியரான Didierக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சட்டென்று அவர், இன்னும் வியாபாரமே ஆகவில்லை, கடை மூடும் நேரம் வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூற, ஆச்சரியப்படும் விதமாக திருடர்கள் மாலை வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.

உடனே பொலிசாருக்கு தகவல் அளித்தார் கடை உரிமையாளர். ஆனால் பொலிசார் கடை உரிமையாளர் சொன்னதை நம்பவில்லை. மாலை 3 மணிக்கு அவர்கள் ஆறு பேரும் திரும்ப கடைக்கு வர, கடை உரிமையாளர், 3 மணி கொள்ளையடிப்பதற்கு ஏற்ற நேரம் அல்ல, 6.30 மணிக்கு வாருங்கள், அப்போது என்னிடம் இன்னும் நிறைய பணம் இருக்கும் என்றார்.

அப்போதும் அந்த திருடர்கள் திரும்பிப் போய்விட, பொலிசாருக்கு மீண்டும் தகவல் அளித்தார் கடை உரிமையாளர். இம்முறை கடைக்கு வந்த பொலிசார் சாதாரண உடையில் பதுங்கியிருக்க, மீண்டும் திருடர்கள் வந்தபோது துப்பாக்கி முனையில் அவர்களை பிடித்துவிட்டனர்.

இந்த சம்பவத்தை பார்க்கும்போது இப்படியும் மிக முட்டாளான திருடர்கள் இருப்பார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.