சாதனை தமிழ்பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!!

451

தமிழ்பெண்

ஜாதி பெயரைச் சொல்லி திட்டு வதாகவும், பாலின ரீதியில் துன்புறுத்துவதாகவும் பயிற்சி யாளர் மீது தடகள வீராங்கனை சாந்தி புகார் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி யிலும் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்சியாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் சமூகத்தினர் துணைத் தலைவருக்கு சாந்தி தபால் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதே புகாரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலும் அளித்துள்ளார். இந்த புகர் மனுவில் கூறியிருப்பதாவது..

விளையாட்டுத் துறையில் பல்வேறு பதக்கங்களை வாங்கி நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளேன். தமிழ்நாட்டில் இருந்து ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற முதல் வீராங்கனை நான்தான். என்னுடன் பணியாற்றி வரும் ராஜன் என்ற ஆபிரகாம் ராஜன் மற்றும் சிலர் ஜாதி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் என்னைத் துன்புறுத்தி வருகின்றனர். என்னை ஆண் என்றும் நான் எப்படி பெண்களுடன் ஓடலாம் என்றும் ராஜன் தரக்குறைவாக விமர்சிப்பார்.

ஜாதி பெயரை குறிப்பிட்டும் விமர்சிக்கிறார். விளையாட்டு விடுதியில் உள்ள அவரிடம் பயிற்சி பெற்ற மாணவிகளைக் கொண்டு எனக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்கச் செய்து என்னுடைய வேலையை காலி செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீஸார் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த புகார் குறித்து தடகள பயிற்சியாளர் ராஜனிடம் கேட்டபோது, ‘‘சாந்தி தன் தவறை மறைப்பதற்காக உண்மைக்குப் புறம்பாக, உள்நோக்கத்தோடு என் மீது புகார் அளித்துள்ளார். அதில் உண்மை இல்லை. விசாரணையின்போது அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன்’ என தெரிவித்துள்ளார்.