தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – துலாம்

1543

யதார்த்தமான முடிவுகளை எடுத்து மற்றவர்களை வியக்க வைக்கும் நீங்கள், கேள்வி ஞானம் அதிகமுள்ளவர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோர்வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். 3ம் வீட்டில் உங்களின் யோகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும்.

உங்களுடைய ராசிக்கு 3ம் சூரியனும், சுக்கிரனும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் அதிகரிக்கும். இந்த 2018ம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி, வயிற்று உபாதைகளெல்லாம் வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது.

லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சுவிடும் நேரத்தில் அடுத்த சிக்கல்கள் ஒன்று புதிதாக தலைத்தூக்கும். தூக்கம் குறையும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். வீண் பழியும் வந்து நீங்கும். கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்வதால் பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன், சனியும் சேர்வதால் மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும்.

பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோயிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக்கடனையும் முடிப்பீர்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன், கேது சேர்வதால் இக்காலக்கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய நேரிடலாம்.

யாருக்காகவும் ஜாமீன் கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். 3.3.2018 முதல் 28.3.2018 வரை சுக்ரகின் 6ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனக்குறைவால் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தாண்டு முழுக்க ராகுபகவான் 10ம் வீட்டிலும், கேது ராசிக்கு 4ம் இடத்திலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுகளெடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும்.

அடுத்தடுத்து வேலைச்சுமை இருக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். தாயார் உரிமையில் ஏதேனும் திட்டினால் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன் வந்தால் உடனே நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரிகளே! லாபம் உண்டு. சில்லரை வியாபாரத்திலிருந்து சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். 3ம் வீட்டில் சனி நிற்பதால் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். ஸ்டேஷனரி, கல்விக் கூடங்கள், போடிங், லாட்ஜிங், கன்ஸ்ட்ரக்சன், டிராவல்ஸ் ஏஜென்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் ராகு 10ல் தொடர்வதால் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

கன்னிப்பெண்களே! செப்டம்பர் மாதம் வரை ஜென்ம குரு நீடிப்பதால் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சனி சாதகமாக இருப்பதால் கல்யாணம் கூடி வரும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். சக மாணவர்களும் தேர்வு சம்பந்தமாக உங்களை கலந்தாலோசிப்பார்கள். வகுப்பாசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிட்டும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

அரசியல்வாதிகளே! பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகாக்கள் மத்தியில் மரியாதை கூடும். மாவட்டப் பொறுப்புகளை கூடுதலாக நீங்கள் பார்க்க வேண்டி வரும்.

விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக கூடுதல் ஆதாயமடைவீர்கள். கால்நடை வளர்ப்பு மூலமாகவும் வருமானம் உயரும். வீட்டில் நல்லது நடக்கும். ஆக மொத்தம் இந்த 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம குரு சின்ன சின்ன சுகவீனங்களை தந்து பலவீனமாக்கினாலும், சனிபகவான் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்குவார்.

பரிகாரம்:திருக்கோவிலூர் திருவிக்ரமப் பெருமாளை தரிசியுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.